மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டமான நிலைமைகள் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது ஐரோப்பிய விமான சேவைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக நேற்று(13-06-2025) அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் பல முக்கிய வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், விமானங்கள் மாற்றுப்பாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் விமானப் பயண நேரத்தை அதிகரிக்கச் செய்துள்ளன என்றும், பயணிகள் வரவேற்கும் நேரத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்திற்கு முக்கியக் காரணம், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான கடுமையான மோதல் ஆகும். இஸ்ரேல், நேற்று அதிகாலை, ஈரானின் அணு மற்றும் இராணுவ தளங்களை இலக்கு வைத்து 200க்கும் மேற்பட்ட விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் பலர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலளிக்கையாக, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான், இஸ்ரேலுடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரத்து செய்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையால், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களால் தங்கள் சேவைகளை மாற்றியமைத்துள்ளன. இஸ்ரேல், ஈரான், ஜோர்டன், லெபனான், ஈராக் போன்ற நாடுகளின் வான்வெளிகள் தற்பொழுது பெரும்பாலான விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”லண்டனிலிருந்து கொழும்புக்கு வரும் UL504 விமானம், மாற்றுப் பாதையின் காரணமாக தோஹா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக திருப்பி விடப்பட்டது.
கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் UL501 விமானமும், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்க்க மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விடயத்தில் பயணிகள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும் என விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கலாம் என்பதால், பயணிகள் தங்களது பயண முகவர்கள் அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்கள் வழியாக மேலதிக தகவல்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பு எண்கள்:
இலங்கைக்குள்: 1979
சர்வதேசம்: +94 11 777 1979
WhatsApp: +94 74 444 1979