இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடறுப்பு செய்யப்படுவது தொடர்பில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் இந்த ஆண்டு இதுவரை 64 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், பல சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும் இதனால் சரியான புள்ளிவிபரத் தரவுகளை வெளியிட முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊடறுப்புக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளின் உரிமையை மீண்டும் பெறுவதற்கு கணனி அவசர பதிலளிப்பு பிரிவினை தொடர்பு கொள்ள முடியும் என சிரேஸ்ட பொறியாளர் சாருக டமுனுபொல தெரிவித்துள்ளார்.
சூம் கூட்ட இணைப்புக்களை கிளிக் செய்ததன் மூலம் இந்த ஊடறுப்புக்களில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
ஹேக்கர்கள் பாதிக்கப்பட்டவரின் வாட்ஸ்அப் குழு உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து அவர்களின் தொழிலைப் பொறுத்து தொடர்புகளுக்கு பணம் கோரும் செய்திகளை உருவாக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஊடறுக்கப்பட்ட கணக்கின் உரிமையாளர் ஆபத்தில் இருப்பதாகக் கூறி 50000 ரூபா அல்லது ஒரு லட்சம் ரூபா உதவி கோரப்படுவதாகவும் பயனர்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகள் வந்தால் வாட்ஸ் அப் ஊடாக மட்டுமன்றி சாதாரண தொலைபேசி அழைப்பு மூலம் குறித்த கோரிக்கை உண்மையானதா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹெக்கர்களின் கோரிக்கைக்கு அமைய பணம் வைப்புச் செய்தவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்கள் இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் OTP-ஐ மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.