நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மட்டக்களப்பு மாவட்டத்திலே சொத்துக்களையும், வளங்களையும் களவு செய்த பட்டியலை வெளியிட்டதில் பெருளவான பங்கு எமக்கிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற மண்வளங்களைச் சூறையாடுவதைப்பற்றி, மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிலே கொள்ளையடித்தைதைப்பற்றி, ஒப்பந்தங்கள் செய்து கொள்ளையடித்தது, போன்றவற்றையெல்லாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தவர்கள் நாங்கள். இந்த ஊழல்களுக்கு எதிராக நாங்கள் அதிகளவு குரல் கொடுத்திருக்கின்றோம்.
மோசடி குற்றச்சாட்டுக்கள்
பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு கையாள்வது என தெரியாத சில முட்டாள்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி மீதும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நாங்கள் மோசடி செய்ததாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.
எவ்வளவோ ஊழல் மோசடிகளை நாங்கள் வெளிப்படுத்திய எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததனால் தான் மக்கள் அதிகூடிய வாக்குகளை மட்டக்களப்பு மக்கள் எனக்குத்தந்தார்கள்.
ஒருசிலர் எமக்கு அவப் பெயரை உருவாக்கப் பார்க்கின்றார்கள். அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் சேகரித்த நிதி எங்கே அந்த நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.