மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திர சாரதி நேற்று திங்கட்கிழமை (20.10.2025) வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றுள்ள நிலையில் இரவாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் உழவு இயந்திர சாரதியின் உறவினர்கள் அவரை தேடி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் வயலுக்கு சென்ற போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளதையும் சாரதி சடலமாக கிடப்பதையும் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.