யாழில் இடம்பெற்ற சுனாமி அனர்த்த ஒத்திகை..!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாட்டின் தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (05.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் கடற்கரை வீதி பருத்தித்துறையில் அமைந்துள்ள யா/ மெதடிஸ்ச பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தம்பசிட்டி வீதி பருத்தித்துறையில் அமைந்துள்ள  யா/வட இந்து மகளிர் கல்லூரி ஆகியனவற்றில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

​இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி ,களுத்தறை,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

​அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில், பொதுமக்கள் எந்த வகையிலும் பீதியடையத் தேவையில்லை எனவும் இதுவொரு ஒத்திகை நிகழ்வு மாத்திரமே என வலியுறுத்தப்பட்டுள்ளது.

​இந்த ஒத்திகையின் போது வெளியிடப்படும் தகவல்கள், அறிவித்தல்கள், மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் ஒத்திகைச் செயற்பாடுகளாக இருந்ததோடு 
இந்த ஒத்திகை நிகழ்வானது, உண்மையான சுனாமி எச்சரிக்கை நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பரிசோதித்து, தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சுனாமி ஒத்திகை நடைபெறும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் வீதிகளில்  தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ் ஒத்திகை நிகழ்வில் கடற்படை அதிகாரிகள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,அனர்த்த முகாமைதுவ பிரிவு உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
புதியது பழையவை