பெய்துவரும் கடும் மழை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன.

இதேநேரம் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று (26.11.2025)இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெற்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இன்று காலை காற்றுடனான கடும் மழை பெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – மண்டூர் பிரதான வீதி, பாலையடிவட்டை வெல்லாவெளி வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு அடிக்கும் மேல் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பொறுகாமம் ஊடாக பிரதேச சபைக்கு இடைப்பட்ட பிரதான வீதி ஊடாக நீர் பாய்வதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயணங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை