வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர் கைது.!

வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 15 வயது மலையகப் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 2026.01.18 அன்று கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி, குறித்த சிறுமி கடந்த (15.01.2026)அன்று சம்பந்தப்பட்ட வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்ட போது, இரவு நேரத்தில் சந்தேக நபரால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தொடர்பில் தேவையான பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை