முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.!

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  இளம் குடும்பஸ்தரை   முதலையொன்று இழுத்துச் சென்ற நிலையில் மாயமான நிலையில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று இளம் குடும்பஸ்தரை நேற்று (04.01.2026) மாலை   இழுத்துச் சென்றிருந்தது.

இந்நிலையில் மறுநாளான இன்று (05.01.2026) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட  நிலையில் மாயமான இளம் குடும்பஸ்தரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நீரின் அளவு அதிகரிப்பு  இருளின் மத்தியில் நேற்று இரவு  10 மணி வரை தொடர்  தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (05) இரண்டாவது நாளாகவும் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் காணாமற் போன இளம் குடும்பஸ்தர் முதலை கடித்து உயிரிழந்த நிலையில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒலுவில்-1  அஸ்ரப் நகர்-12   பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் குத்தூஸ் றமீஸ்  (வயது-38) என்பவர் ஆவார.

குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்  இரண்டு நாட்களாக ஒலுவில் வாழ் பொதுமக்கள், அனர்த்த  முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர்,சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல் - உஸ்வா சம்மாந்துறை ஜனாசா அமைப்புக்களின் உதவியுடன் மேற்படி நபரின் சடலம்  மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை  அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  வேண்டுகோளிற்கிணங்க   திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில்   மேற்கொள்ளப்பட்டு முதலை  தாக்கியதனால் ஏற்பட்ட  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம்   கையளிக்கப்பட்டுள்ளமை    குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை