மட்டக்களப்பில் வயலில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு.!

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று (06.01.2026 )ஆம் திகதி மீட்டுள்ளனர்.

இதன்போது 38 ஆர் பிஜி குண்டுகள், 37 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் இவை இப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக மடு தோண்டும் போது மர்மப் பொருள்கள் தென்படுவதனை அவதானித்து வாகரை விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனை அடுத்து அதிரடிப் படையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வெடிபொருட்கள் உள்ளதை உறுதிப்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து வெடிபொருட்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை