மட்டக்களப்பில் நேற்று (04.01.2026)ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் டிஜிட்டல் நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடையில் மாவட்டத் தலைவர் சாணக்கியன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், மருத்துவர் சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன், கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் சேயோன் உட்பட சுமார் 40 பேர் வரை இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணி நடத்திய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில், ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை ஈகைச் சுடர் ஏற்ற மேடைக்கு அழைத்த விவகாரம் தமிழரசுக் கட்சிக்குள் வாத விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பின்புலத்தில், நேற்றைய கூட்டத்திலும் இது பற்றி மேலோட்டமாக பேசப்பட்டதாகத் தெரியவந்தது.
அச்சமயத்தில் தலைமைக் கதிரையில் இருந்த சாணக்கியன் எம்.பி., தமக்கு பக்கத்தில் இருந்த சிறிநேசன் எம்.பிக்கு, ஏற்கனவே கட்சியிலிருந்து அரியநேத்திரனை வெளியேற்றுவது என்று எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியைத் தனது கைத்தொலைபேசியில் இருந்து எடுத்துக்காட்டினார்.
இந்தக் கடிதம் பதிவுத் தபாலில் தமக்குக் கிடைக்கவில்லை என்று அரியநேத்திரன் கூறுகின்றார் என்ற சாரப்பட சாணக்கியனின் காதுக்குள் சிறிநேசன் கிசுகிசுத்தார் எனத் தெரிகின்றது.
அது குறித்து அரியநேத்திரன் கட்சியின் தலைமையுடன் பார்த்துக் கொள்ளட்டும், அது எங்களுக்குரிய விடயம் அல்ல என்று விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாணக்கியன் என அறியவந்தது.
உள்ளூராட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர்களை வழிநடத்துகின்ற வழிகாட்டல்கள் தொடர்பாகவும் இறுக்கமான சில நடைமுறை உத்தரவுகளை இந்தக் கூட்டத்தில் சாணக்கியன் வழங்கினார் என்றும் அறியவந்தது.
கூட்டம் பெரும்பாலும் கலந்துரையாடல் பாணியில் நடைபெற்றது. ஆங்காங்கே விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் பயனுள்ள – ஆரோக்கியமான விடயங்கள் விவாதிக்கப்பட்ட கூட்டமாக அது அமைந்ததாகக் கூட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் பிரதிநிதி ஒருவர் பின்னர் தெரிவித்தார். – என்றுள்ளது.