முன்னாள் எம்.பி வியாழேந்திரனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.!

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்  நேற்று (17.02.2026)ஆம் திகதி  உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை மாத்திரம் இந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

பயணத்தடையை நீக்குவதற்காக, நெருங்கிய உறவினர் ஒருவரின் மேலதிக சரீரப் பிணையை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகும் பிணையாளியின் வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தனிநபர் ஒருவருக்கு மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதற்காக 15 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றமைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே எஸ்.வியாழேந்திரனுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, கையூட்டல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவி சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி, சந்தேகநபர் இந்த சம்பவத்தின் பிரதானி என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் மாத்திரம் பயணத்தடையை நீக்குமாறும், அதற்கு பிணையை நிர்ணயிக்குமாறும் கடந்த வழக்குத் தவணையின் போது கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை