கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்றைய தினம் (16.02.2026)ஆம் திகதி நீதிமன்ற கடமைகளிலிருந்து விலகி இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலையேற்பட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதியான முறையில் போராட்டத்தினை நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.