மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எலிகாய்ச்சல் (Leptospirosis) நோய் பரவாமல் தடுக்கும் நோக்கில், அப்பகுதியிலுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (04.03.2026)ஆம் திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் வழிகாட்டலில், வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) ஏற்பாட்டில் இந்த விசேட செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மிருணாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு அதிகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தற்போது விவசாய நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் எலிகாய்ச்சல் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது.
வயல் நிலங்களுக்குச் செல்வதற்கு முன்னர் உட்கொள்ள வேண்டிய தடுப்பு மாத்திரைகளின் (Doxycycline) முக்கியத்துவம்.
கைகால்களில் காயங்கள் இருக்கும்போது சேற்று நீரில் வேலை செய்வதைத் தவிர்த்தல்.
நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடுதல்.
இச்செயலமர்வில் கலந்துகொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மூலம், அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு இந்தத் தகவல்களைக் கொண்டு சேர்க்குமாறு சுகாதார அதிகாரிகளினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் போரதீவுப்பற்று வெல்லாவெளிப் பகுதியில் எலிகாய்ச்சல் பரவுவதைக் கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.