கட்டார் மன்னருடன் இலங்கை ஜனாதிபதி தொலைபேசி ஊடாக கலந்துரையாடல்

கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும்,  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொலைபேசி வழியிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்டாரில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார கேட்டறிந்தார்.

கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஈரானிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.


கட்டாரில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரின் நலன் குறித்து மன்னர் அல்தானி, ஜனாதிபதிக்கு உறுதி அளித்தார்.

கட்டார் எல்லைக்குள் வசிக்கும் அனைத்து தரப்பினரின் பாதுகாப்பிலும் தனது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ள நேரடித் தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும், நம்பகமான எரிசக்தி பங்காளியாக கட்டார் தொடர்ந்தும் செயல்படும் என்றும், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய தனது நாடு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மன்னர் உறுதியளித்தார்.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ராஜதந்திர ரீதியிலான தீர்வுகள் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.
புதியது பழையவை