இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (13.03.2026)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், மேலதிக விசாரணைக்காக அந்த வழக்கு ஜூலை 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் இடையீட்டு எதிராளியாக தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பான விசாரணை நடைபெறுவதற்காகவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்காளரும் ஏனைய எதிராளிகளும் தங்களது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்க இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த அமர்வில் இந்த விடயத்தில் எவ்வாறு தொடர வேண்டும் என்பதைக் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது.
இந்நிலையில், வழக்கில் புதிய எதிராளியாக இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் பதவியில் உள்ள சி.வி.கே. சிவஞானம் இணைக்கப்பட்டுள்ள பின்னணியில், அவரது பதில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதனை எதிராளிகளில் ஒருவரான சிவஞானம் சிறீதரன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் கடுமையாக எதிர்த்தார். ஏற்கனவே முன்னாள் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் மனு தாக்கல் செய்திருப்பதால், புதியதாக மீண்டும் பதில் மனு தாக்கல் செய்ய தேவையில்லை என அவர் வாதிட்டார்.
ஆயினும், சி.வி.கே. சிவஞானம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அந்த வாதத்தை மறுத்து பதிலளித்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.இடையீட்டு எதிராளியாக சேர்க்க கோரிய மனு தொடர்பான விசாரணை முடிந்த பின்னரே மூல வழக்கின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனதெரிவிக்கப்படுகிறது.
இதனால் வழக்கின் தீர்ப்பு வெளிவர மேலும் காலம் ஆகக்கூடும் எனவும் கூறப்படுகிறது.இன்றைய விசாரணையில், வழக்கில் தமக்குத் தாமே வாதாடி வந்த எம்.ஏ. சுமந்திரன் நேரில் ஆஜராகவில்லை; அவரது சார்பில் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.