கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று (14.04.2026) 'பராபவ' வருட தமிழ் சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
விசேட அபிஷேகமும் ஆராதனையும்
ஆலயத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ செ. சற்குணராசா குருக்கள் தலைமையில் இந்த விசேட புத்தாண்டு பூஜைகள் இடம் பெற்றன.
இதன்போது அம்மனுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
புதிய ஆண்டில் உலக மக்கள் அனைவரும் நோய் நொடிகள் இன்றி, சுபீட்சமாகவும் அமைதியுடனும் வாழ வேண்டி விசேட ஆசிப் பிரார்த்தனைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
அலைமோதிய பக்தர் கூட்டம்
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும், அண்டை கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனைத் தரிசித்துச் சென்றனர்.
விழாக்கோலம் பூண்ட ஆலயம்
பக்தர்களின் வருகையினால் ஆலய வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வருகை தந்த பக்தர்களுக்கான குடிநீர், நிழல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஆலய நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.