பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்துப் பாவனை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (08.04.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும் கூட, அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வீதிப் பாதுகாப்பைப் பேணும் வகையில் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் வீதிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் காவல்துறை போக்குவரத்துப் பிரிவினர் விசேட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.