விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த “சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் அண்மையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் சட்டத்தரணி குகதாசன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. பெண்கள் நுண்கடன்களால் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை தொடர்பாக தனது அனுபவங்களை மட்டக்களப்பு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் சார்பாக மதனா பாலகிருஷ்ணராஜா பகிர்ந்து கொண்டார்.