நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என பொது நலவாய சட்டத்தரணிகள் சங்கம் (Commonwealth Lawyers Association) இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் (Commonwealth Lawyers Association) தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
நினைத்த மாத்திரத்தில் அல்லது அவசர அவசரமாகவோ அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளவும்.
அத்துடன் நீதிமன்றம் தொடர்பிலுள்ள நம்பிக்கை மற்றும் அதன் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு மதிப்பளிக்குமாறும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நடைமுறையிலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் ஓய்வுபெறும் 63 வயதெல்லை மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் ஓய்வுபெறும் 65 வயதெல்லை ஆகியவற்றை தன்னிச்சையாக மாற்றியமைக்கக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மே 25ஆம் திகதி மேற் கண்ட காரணங்களை சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து இதுவரை அரசாங்கத்திற்குள் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸஇ ஜூன் 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.