லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பதவியில் இருந்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஷியாமிலா பெரேரா தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்நிறுவனத்தின் கீழ் 3 அதிகாரிகள் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த அதிகாரிகளை லொத்தர் சபையின் பணி நிமித்தம் பயன்படுத்தாமல், அப்போதைய அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட அமைச்சரவை அலுவலகப் பணிகளுக்காக அவர் சட்டவிரோதமாக அமர்த்தியுள்ளார்.

லொத்தர் சபை நிதியிலிருந்து அந்த அதிகாரிகளுக்குச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கிவிட்டு, அவர்களை அமைச்சரின் அலுவலகத்தில் வேலை செய்ய அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.


இந்த முறைகேடானது பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் புரிந்த குற்றச்சாட்டுகளின் கீழ் வருவதனால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் ஷியாமிலா பெரேராவைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், இந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை