ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த பெண் இளைஞர்களால் உயிருடன் மீட்பு.!

மட்டக்களப்பு ஓட்டமாவடி ஆற்றில் குதித்து தத்தளித்த குடும்பப்பெண் ஒருவரை, அங்கு நின்ற இளைஞர்கள் இருவர் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28.07.2026)செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

​முச்சக்கர வண்டி ஒன்றில் ஓட்டமாவடி பாலத்தைக் கடந்து பயணித்த குறித்த பெண், தொலைபேசியில் அவசரமாகப் பேச வேண்டும் எனக் கூறி முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கோரியுள்ளார்.

சாரதி வண்டியை நிறுத்திய கணத்தில், அப்பெண் எதிர்பாராதவிதமாக ஓட்டமாவடி ஆற்றில் குதித்துள்ளார்.

​ஆற்றில் பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட இரு இளைஞர்கள், உடனடியாகச் செயல்பட்டு ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தோணி ஒன்றின் உதவியுடன் அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

​உயிருடன் மீட்கப்பட்ட பெண் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


​இச்சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை