அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, கொழும்பில் அமைந்துள்ள பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியான, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், உப தலைவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.