திருகோணமலை - தம்பலகாமம் ஜெயபுர பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்றுச் சனிக்கிழமை (29.08.2026) இரவு 7.30 மணியளவில் இக்கோர விபத்து சம்பவித்துள்ளது.
தம்பலகாமம் பட்டிமேட்டுப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரணவன் என்ற இளைஞனே இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவராவார்.
திருகோணமலையிலிருந்து சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்று கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக லொறியும், தம்பலகாமத்திலிருந்து திருகோணமலை நகர் நோக்கி இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிளும் ஜெயபுர பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோதிய வேகத்தில் மோட்டார்ச் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற இளைஞன் தீவிர காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.