மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் ஒன்று மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை இன்று (20.08.2026)ஆம் திகதி கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான மடத்திற்க கடந்த 8ம் திகதி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று அதனை நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து ஒருபவுண் தங்க சங்கிலி ஒரு கிராம் மோதிரம் மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை வைத்து பூட்டிவிட்டு மடத்துக்குள் சென்று திரும்பி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சீற்றை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணம் மற்றும் பணம் திருடு போயிருந்தது.
இதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள சிசிரி கமரா மூலம் திருடனை அடையாளம் கண்டு கொண்டதையடுத்து மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருடன் ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் திருடிய தங்க சங்கிலி புதைத்து வைத்திருந்த பற்றை காட்டிற்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட போது அங்கு அது கிடைக்கவில்லை எனவும் திருடிய பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது குறித்த நபர் ஏற்கனவே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுவர் எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.