திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02.08.2026) ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
குறிப்பிட்ட வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது 21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும், மற்றையவர் உயர்கல்வி மற்றும் பணி நிமித்தம் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லத் தயாராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்தையடுத்து, ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.