இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீளப்பெற முடியாத சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியை முன்னெடுக்கக் கோரும் 100 நாள் செயலமர்வின் 4வது நாள் அணிதிரளலின் ஒரு பகுதியாக, சமஷ்டி பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (07.08.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பட்டை பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட வளவாளர் தாமோதரம் பிரதீபனால் சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, 13வது திருத்தச் சட்டம், மீளப்பெற முடியாத சுயநிர்ணய உரிமை தொடர்பில் தெளிவூட்டப்பட்டதுடன், அவை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தங்களைத் தாங்களே ஆளுகின்ற மீளப்பெற முடியாத சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் ஓரணியில் நின்று வலியுறுத்துவது தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.