கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பில் பங்காளர்களுடன் கலந்துரையாடல்.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல் தொடர்பில் பங்காளர்களுடனான விசேட கலந்தாய்வுக் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19.08.2026) ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

கண்ணகி கிராமம் கிராம அலுவலர் 01, 02 பிரிவை மையமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராமத்தின் காணி வளங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கிராம மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், குடியிருப்பு காணிகள், விவசாயம், வீதிகள், நீர்ப்பாசனம் மற்றும் வயல் நிலங்கள், குடிநீர், வடிகான் புனரமைப்பு உள்ளிட்ட 13 முக்கிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு, அவை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், அதிகாரசபை ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

பிரதேச செயலக மட்டத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஏனைய விடயங்களை மாவட்ட செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் மா. ராமக்குட்டி, பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி பரிமளவாணி சில்வஸ்டர், உதவித் தவிசாளர் க. ரகுபதி, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்களான கு. கலாரஞ்சன், எம். வசந்தராஜ், நவநீதன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கண்ணகி கிராமத்தின் நீண்டகால காணிப் பயன்பாட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நிலையான தீர்வுகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை