காரில் கடத்தப்பட்ட யுவதி - பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (29.08.2026) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை