ஈரானிய மாலுமிகளை தாயகம் அனுப்ப வெளிவிவகார அமைச்சு தாமதிப்பது ஏமாற்றமளிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு!

ஈரானிய கப்பலில் தங்கியுள்ள மூன்று மாலுமிகளை அவர்களின் குடும்பத்தாரிடம் திருப்பியனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து மௌனம் காத்து நடவடிக்கையெடுக்காமலிருப்பது ஏமாற்றமளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 
பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு குறித்து தாம் விவாதிப்பதாகவும், நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இத்தகையதொரு பதவி அவசியமற்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதால் செலவினங்களைக்குறைக்கும் நோக்கில் இப்பதவியை இரத்து செய்வதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, இன்றைய நாளிதழ்களைப் பார்க்கும் போது, இந்தியப்பெருங்கடலில் நமது நாடு எவ்வளவு முக்கியத்துவமிக்க மூலோபாய அமைவிடத்தில் அமைந்திருக்கின்றதென்பதை உணர முடிகின்றது. இந்த அமைவிடம் சர்வதேச வல்லரசுகளுடனான நமது இராஜதந்திர உறவுகளில் ஒரே நேரத்தில் சாதகமாகவும், அதே வேளையில், சவாலாகவும் அமைகின்றது.

பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்திய பாதுகாப்பமைச்சர் இங்கு வருகை தந்துள்ளதை நாம் காண்கின்றோம். மேலும், அமெரிக்கத்தூதுக்குழுவினர் இங்கு வருகை தந்து கடல்சார் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததையும் கண்டோம். 

அதேபோல, நமது கடல் பிராந்தியத்தில் மூலோபாய நலன்களைக்கொண்டுள்ள சீனா போன்ற ஏனைய போட்டி வல்லரசுகளும் இங்கு பிரசன்னமாகியுள்ளன.

இப்போது நான் ஒரு விடயத்தைச்சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். ஜனாதிபதி அண்மையில் பேருவளையில் உரையாற்றிய போது ஒரு சிறிய பேச்சுப்பிழையை (வார்த்தைத் தவறைக்) விட்டிருந்தார். 

எனினும், நான் அதனைப்பெரிதுபடுத்த விரும்புவதில்லை. பொதுக்கூட்டங்களில் பேசும் போது அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறான வார்த்தைப் பிழைகள் நேர்வது இயல்பு. இதற்கு முன்புகூட பாராளுமன்றத்தில் நாட்டின் அளவை விவரிக்கும் போது 'ஹுண்டுவக்' (ஒரு சிறியளவு) என்று அவர் கூறியது அரசாங்கத்திற்குள் பெரிய சர்ச்சையானதை நாமறிவோம்.

அதேவேளை, நாட்டின் தலைவர் பேசும் போது அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். 

குறிப்பாக, ஈரானியப்போர்க்கப்பல் மீது அமெரிக்கப் படைகளால் டார்பிடோ தாக்குதல் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்திற்குப்பிறகு, ஜனாதிபதி கூறிய உரையை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்:

"ஈரானிய மாலுமிகளுக்கு இலங்கை வழங்கும் மனிதநேய உதவிகள் அமெரிக்காவைக் கோபப்படுத்துமா? எனக்கேட்கப்பட்டதற்கு ஜனாதிபதி அவர்கள்: 'இது எந்த வகையிலும் போருக்கு ஆதரவளிப்பதாகாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு நாடாக அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை. அதுவே நமது அணுகுமுறை. இது போன்ற சூழ்நிலையில் உதவி தேவைப்படும் எந்தவொரு நாட்டிற்கும் இலங்கையின் ஆதரவு கிடைக்கும். சர்வதேச உடன்படிக்கைகளின்படி நாம் செயற்படவில்லை என்றால் மட்டுமே அவர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்' எனக்குறிப்பிட்டார்."

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. இலங்கை ஒரு சுயாதீனமான, அணிசேரா மற்றும் நடுநிலையான நாடாகத்தொடர்ந்து இருக்குமென்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்:

"நாம் எந்த நாட்டிற்கும் சார்பானவர்களுமல்ல, எந்த நாட்டிற்கும் பணிந்து போகவும் மாட்டோம். நாம் ஒரு இறையாண்மையுள்ள தேசம். அரசாங்கத்தின் முதன்மைப்பொறுப்பு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், நமது கடல் எல்லைக்குமே உரியது."
 
அவர் கூறிய இந்த வார்த்தைகளை எண்ணி நாம் அனைவரும் பெருமையடைகின்றோம்.
ஆனால், இதற்கிடையே மார்ச் 06ம் திகதி சர்வதேச செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானியக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 'Iris Bushahr' என்ற ஈரானியக்கப்பலை இலங்கை தனது பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்தது. 

அதிலிருந்த 204 மாலுமிகள் கொழும்புக்கு அருகிலுள்ள வெலிசறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். கப்பலில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய இலங்கை கடற்படையினருக்கு உதவ மேலும் 15 மாலுமிகள் கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அக்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கையின் காவலில் வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் கூறுகையில்:
"ஒரு எஞ்சின் பழுதடைந்ததைத்தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகள் மற்றும் கப்பலின் தலைவருடன் நடத்திய கலந்துரையாடலுக்குப்பின்னரே கப்பலை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தீர்மானித்தோம். இது சாதாரண சூழ்நிலையல்ல. சர்வதேச உடன்படிக்கைகளின்படியே நாம் இதனைப் பரிசீலித்தோம். போர்களில் எந்தவொரு பொதுமகனும் இறக்கக்கூடாது. ஒவ்வொரு மனித உயிரும் எமது உயிரைப்போன்றே மதிப்பானது" எனத்தெரிவித்திருந்தார். நாங்களும் இந்த நல்ல நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.

ஆனால், தற்போதைய சூழலில் ஈரானியத்தூதரகம் எமது பாதுகாப்பமைச்சிடம் ஒரு இராஜதந்திர கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட அக்கப்பலிலுள்ள 3 மாலுமிகள் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கப்பலிலேயே தங்கியுள்ளதால், அவர்கள் கடுமையான உடல் சோர்விற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். 

எனவே, அந்த 3 பேருக்குப்பதிலாக 3 புதிய மாலுமிகளை நியமித்து, இவர்களைத்தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோன்றதொரு சூழலில், இந்தியாவில் நங்கூரமிட்டிருந்த ஈரானியக்கப்பலில் இருந்த 31 மாலுமிகளை மாற்றி, அவர்களைச்சொந்த நாட்டிற்குச் செல்ல இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இங்கு நமது பாதுகாப்பமைச்சு இந்த மாலுமிகளை மாற்றுவதற்கு 'எந்த ஆட்சேபனையும் இல்லை' என அனுமதி வழங்கி விட்டது! ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எமது வெளிவிவகார அமைச்சு இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றது. இதனால் அந்த மாலுமிகளும் அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

தற்போது ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டுள்ளதால், முழுமையான கப்பலும் ஈரான் திரும்ப முடியாத நிலை இருக்கலாம். ஆனால், மனிதநேய அடிப்படையில் இந்த 3 மாலுமிகளை மட்டும் பிரதியீடு செய்து திருப்பியனுப்ப முடியும்.

எனவே, சபையின் முதல்வர் மூலமாக நான் கேட்டுக்கொள்வது, வெளிவிவகார அமைச்சுடன் உடனடியாகப்பேசி, இந்த 3 மாலுமிகளும் தமது குடும்பங்களுடன் சேருவதற்குத் தேவையான அனுமதியை எவ்வித தாமதமுமின்றி வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கோருகின்றேன்" என ரவூப் ஹக்கீம் தனதுரையில் குறிப்பிட்டார். 

புதியது பழையவை