மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான அமரர் ஊர்தி மீது மிகப்பெரிய புளியமரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது.
எனினும், அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
போரதீவுப்பற்று, 37ஆம் கிராமம், கூழாவடி - நெல்லிக்காடு பகுதியில் கடந்த (08.09.2026) அன்று காலமான ஒருவரின் உடலை நல்லடக்கத்திற்காக வெல்லாவெளி மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடலை ஏற்றிச் செல்வதற்காக அமரர் ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (09.09.2026) சடலத்தை ஏற்றுவதற்காக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், அருகில் இருந்த மிகப்பெரிய புளியமரம் திடீரென வாகனத்தின் மீது முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி, மேற்கூரை மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Side Mirrors) உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன.
மரத்தின் பாகங்கள் விழுந்த சமயத்தில் வாகனத்தில் இருந்த சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி தப்பினார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் த.கயசீலன், அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அமரர் ஊர்தியைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.