Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், "அத்தம்" செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (19.09.2026) ஆம் திகதி வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 43 கிராம சேவகர் பிரிவுகளிலும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் முக்கிய கட்டமாக, பழுகாமம் 1-ம் பிரிவில் அமைந்துள்ள வாய்க்காலைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி போரதீவுப்பற்று பிரதேசசபையின் வாகன உதவியுடன் இன்று பழுகாமத்தில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.கமல்ராஜ் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினரும் Clean Sri Lanka இணைப்பாளருமாகிய செல்வி. மகாலிங்கம் மனோதினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தமது பூரண பங்களிப்பை வழங்கினர்.
"எமது கிராமத்தை நாமே சுத்தம் செய்து, தூய்மையான தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற உயரிய நோக்கோடும் மக்களின் உன்னதமான ஒத்துழைப்போடும் இச்செயற்றிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.