தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போதும் விடுதலைப்புலிகளின் அரசியல் அஸ்திரமாக செயற்படுகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் ஷா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை. இருப்பினும் நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்ட வேளையில் அருகில் இருந்தவர்களுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும். பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை. தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.
ஆனால் அவர்களினால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு இலங்கையில் அனுமதி உள்ளது.
எவ்வாறெனின், இலங்கையில் உள்ள அரசியல் காட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பி அவர்களின் இலங்கை பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும்.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றதொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இன்றுவரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கான முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும், புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றன.
தேசிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் கட்சியை உருவாக்கினாலும் வாக்களிக்க வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. ஆனால் மக்கள் ஆதரிக்க வேண்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.