அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற தாதியருக்கு கொரோணா தொற்று


திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோணா தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் ஒருவருக்கு அரசால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு அதி தீவிர சிகிச்சை பிரிவில் கடமை புரிவதற்காக தொடர்ச்சியாக வேறு தாதியர்கள் அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேறு வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்களை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படும் செயற்பாடானது தற்போது இடைநிறுத்த பட்டிருப்பதாகவும் அதற்கான மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை நகர்புறத்தில் இருக்கின்ற 3 பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவருக்கும் ஏனைய இரு பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த மாணவருடன் தொடர்புடையவர்கள் அவரவர்களது,வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொடர்ச்சியான பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 17 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7, குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் .

புதியது பழையவை