ஏப்ரல் 19 ஆம் திகதியன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை ஒக்ரோபர் மாதத்தில் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
மேலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ளதால், டிசெம்பர் மாதத்துக்கான விடுமுறையை ஜனவரி மாதம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
ஆகவே, ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு க.பொ.த. உயர்தரம், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்து வருகிறது.
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒக்ரோபர் 3 ஆம் திகதியன்றும், க.பொ.த உயர் தரப்பரீட்சை ஒக்ரோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது