உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு பொறுப்பேற்றுள்ள பொலிஸார் நவம்பர் 20 ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், குறிப்பாக வரையறுக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்புகளை கையாள கைது அதிகாரம் இல்லாமல் அழைக்கப்பட வழிவகுத்தது என சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை அடுத்து நீதித்துறை மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும் பரவலாக விமர்சித்த நிலையிலும் ஒக்டோபர் 22 இல் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேறியது.
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற அமைப்புகளுக்குரிய நியமனங்கள் வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.ஈஸ்டர் தாக்குதலின் போது கொண்டுவரப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகால நிலையினால் பாதுகாப்பு தரப்பினருக்கு கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது. பின்னர் 2019 ஓகஸ்டில் குறித்த அவசரகால நிலை முடிவுக்கு வந்தது.
எவ்வாறாயினும், அவசரகால நிலை காலாவதியானதிலிருந்து ஒவ்வொரு மாதமும் பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளை அனுப்பும் உத்தரவை அரசாங்கம் வர்த்தமானி செய்து, இராணுவத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தியது.
இறந்த தற்கொலை குண்டு தாரர்களுக்கு பொருள் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான விசாரணைகளுக்காக பலர் கைது செய்யப்பட்டபோதும் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகள், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுதல், தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுதல், ஊடகவியலாளர்கள் கைது, பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
