திருகோணமலை- திரியாய் பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற நபரொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று 13-06-2021ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர் திரியாய்- கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே. பிரபாகரன் (48 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திரியாய் பகுதியில் உள்ள வயல் காவலுக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த போது கரடி பாய்ந்து அடித்ததாகவும், இதனையடுத்து காலில் காயம் ஏற்பட்ட நிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வைத்தியசாலையின் ஊழியரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், யானையின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் யானையின் தொல்லை மற்றும் கரடியின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
