இலங்கையில் தொடரும் மழையால் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கின!


மழையுடன் கூடிய காலநிலையினால் களு கங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.

களு கங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கங்கையை அண்மித்த ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அத்தனகலு ஓயாவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல பிரதேசங்களிலும் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருககிறது. மழை தொடர்ந்தும் பெய்யுமிடத்து, வெள்ளம் அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்வதனால் தாழ்நில பிரதேசங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு 8.30இல் இருந்து இன்று அதிகாலை 1.30 வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடவில் 247 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைத்திருக்கிறது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரியவில் 218.5 மில்லி மீற்றர் மழையும், கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்கவில் 208.7 மில்லி மீற்றர் மழையும் பதிவாகி இருக்கின்றன. களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் 193 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளன.

புலத்சிங்கள, மோல்காவ, பரகொட மற்றும் கெட்டகம்பிட்டிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளன. பாலிந்நுவர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன.மீரிகம, ரந்தல்கொட, திருவானவத்த பிரதேசங்களிலுள்ள சில வீடுகள் நீரிவில் மூழ்கியிருக்கின்றன.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடயில் 173.5 மில்லி மீற்றர் மழையும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவில் 156.6 மில்லி மீற்றர் மழையும், கம்பஹா மாவட்டத்தின் யக்கல பிரதேசத்தில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது

புதியது பழையவை