மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டிஎம்ஏ.சமரகோன் தெரிவித்தார்.
குறித்த வாகனங்களில் 49 பயணிகள் பயணம் செய்ததுடன் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில்
மூன்று பேருக்கு கொவிட் தொற்று காணப்பட்டதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார்.
தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனைகளின் போது குறித்த பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக் கடந்து கொழும்பிற்குச் சென்று திரும்பிவரும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பயணம் செய்தவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்