போரதீவுப்பற்றில் குடிநீர் விநியோக திட்டம் மக்களிடம் கையளிப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட  திக்கோடை, தும்பங்கேணி ஆகிய கிராமத்தில் உள்ள வீட்டு திட்டங்களுக்கு பிரதேசசபையினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த ஆட்சியில் வறியமக்களுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் செமட செவன மாதிரி வீட்டுத்திட்டம் எனும் திட்டத்தில் இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கப்பட்டது.
சகல வசதிகளும் செய்துதரப்படும் என்னும் உறுதிமொழியுடன் குறித்த வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டபோதிலும் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாத நிலையில் மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபை மூலம் குறித்தபகுதி மக்களுக்கு குழாய் மூலமான குடிநீரினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

மாகாண சபை நன்கொடை வேலைத்திட்டத்தின்கீழ் கிடைக்கப்பெற்ற ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்கீழ், தும்பங்கேணி கிராமிய நீர் வழங்கல் திட்ட நீர் விநியோக குழாய்களை விஸ்தரித்து குறித்த பகுதி வீடுகளுக்கு நீரிணைப்பை வழங்கப்பட்டுள்ளது. 

இதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச  சபை தவிசாளர் யோகநாதன் ரஜனி தலைமையில் இடம் பெற்றன

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச  சபை செயலாளர் பா. சதீஸ்கரன், நீர்வழங்கலுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் கோகுலமூர்த்தி,இ. ஜீவராஜ் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த குடிநீர் விநியோக திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை