குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி


புதுக்குடியிருப்பு விசுவமடு பாராதி மகா வித்தியாலயத்தில் கற்றலுக்காக சென்ற மாணவர்கள் 24 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாரதி மகாவித்தியாலயத்தில் கற்றல் மத்திய நிலையத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு பாரதி மகாவித்தியாலத்தின் கற்றல் மத்திய நிலையத்தில் கற்றல் செயற்பாட்டிற்காக சென்ற மாணவர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்ட 24 பாடசாலை மாணவர்கள் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 05 மாணவர்களும் 19 மாணவிகளும் அடங்குகின்றார்கள். குறித்த கிராமங்களில் தொலைத் தொடர்பு வசதிகள் (சிக்னல்) இல்லாத நிலையில் மாணவர்கள் இணையவழி கல்வினை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்ககைக்காக கற்றல் மத்திய நிலையமாக குறித்த நிலையம் இயங்கிய வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 மாணவர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றார்கள்.

புதியது பழையவை