மட்டு-ஊடகவியலாளர் நிலாந்தனிடம் துருவி துருவி விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பா?, பற்றிநாதம், மீனகம் இணையதளங்களை நீங்கள் நடத்துகிறீர்களா? என மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடாத்தியுள்ளனர்.

இன்று (12)காலை மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செ.நிலாந்தனிடம் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடைபெற்று வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த விசாரணையில் ஊடகவியலாளரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதோடு ஊடகவியலாளரின் முகநூல் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, வங்கி கணக்கு, வட்ஸ் அப் கணக்கு உள்ளி பல விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் பெற்றுக்கொண்டதுடன் பாஸ் வேட்டையும்(password) தருமாறு கோரியுள்ளனர்.

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருந்தீர்களா? உங்களது உறவினர்கள் யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்துள்ளீர்களா?

நீங்கள் எத்தனை வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளீர்கள்? எந்த எந்த ஊடகங்களுக்கு பணியாற்றுகின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பில் இருக்கின்றீர்களா?

பற்றிநாதம், மீனகம் இணையதளங்களை நீங்களா நடத்துகின்றீர்கள்? நீங்கள் தொண்டு நிறுவனம் வைத்துள்ளீர்களா? உங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான இணையத்திற்கும் தொடர்பு உள்ளதா? உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா? எந்த எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறது? யார் யார்? பணம் அனுப்பினார்கள்? எந்த எந்த ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ளீர்கள்? என பல கேள்விளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தியதோடு அதற்கான பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து பல இடங்களில் கையொப்பங்களை பெற்றுக் கொண்டதாக ஊடகவியலாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை