மட்டக்களப்பில் 24மணி நேரத்தில் 256 தொற்றாளர்களும் 5 மரணங்களும் ஏற்பட்டுள்ளன


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 256 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்தார்.

மூன்றாவது கொவிட் அலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 9043பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூன்றாவது அலையின் தாக்கத்தினால் 124பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (07)மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் குணம்குறியற்றவர்கனை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கும்போதே அதனை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும் எனவும் பணிப்பாளர் டாக்டர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்தார்.

டெல்டா வேரியன் தாக்கம் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏற்படவில்லையெனவும் பொதுமக்கள் தமது சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமே இவ்வாறான தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை