தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை விமர்சிப்பதை விடுத்து பாமர மக்கள் அல்லது விலையெற்றத்தால் கஸ்டப்படுகின்ற மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று நேற்று திறந்துவைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், சத்தோச வர்த்தக நிலையத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அத்தியாவசிய தேவைக்கான பொருட்களையும் நிவாரண விலையில் வழங்கிவருகின்றனர்.
வாணிக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சதோச திறக்கப்பட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் நிவாரண விலையில் பெற்றுக்கொடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனிடம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இந்த சதோச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் சத்தோச விற்பனை நிலையமானது திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சதோச நிறுவனங்களின் தலைவர் ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சதோச விற்பனை நிலையம் ஊடாக சில்லை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கான பொருட்களும் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் மக்களுக்கு பொருட்களை விநியோகிக்ககூடிய நிலையுள்ளது.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்,
கொவிட் தொற்று காரணமாக இந்த நாடு மிகப்பெரும் நெருக்கடியில் உள்ள நிலைமையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மிகப்பெரும் பிரச்சினையாகயிருந்தது.அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
இன்று போலித்தேசியவாதிகளுக்கு ஒன்றை சொல்லவிரும்புகின்றேன்.ஒற்றுமைபற்றி பேசுவார்கள்,வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுவார்கள்,பிள்ளையானோடு பேசமுடியும் என்பார்கள் பேசமுடியாது என்பார்கள்,இன்று விசேடமாக சர்வதேசம் பற்றி பேசுகின்றார்கள்.இவர்களுக்குள்ளே ஒற்றுமையிருக்கின்றதா என்பது தொடர்பில் முதல்கேட்கவேண்டும்.ஒன்றுபட்டால்தான் உண்டுவாழ்வு என மேடையில் முழங்குகின்றவர்கள் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நான்கு பிரிவாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் அவர்களும் ஏதோ எழுதியுள்ளார்.அது நியாயமானதா அல்லது அமெரிக்கா,ஐரோப்பாவினை திருப்திப்படுத்தக்கூடிய கருத்தினை தெரிவித்திருக்கின்றார்.அதற்கு போட்டியாக கஜேந்திரகுமாரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் சிவில் அமைப்புகள் என்று பல கூறுகளாக பிரிந்துகிடப்பவர்கள் மட்டக்களப்புக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள்.அதனால் யார் முதல் ஒன்றுபடவேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்கவேண்டும்.
மறுபக்கத்தில் அரசாங்கமானது தனது நிலைப்பாட்டினை உறுதியான குரலில் ஒன்றாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்றுகேட்டால் எமது நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் பின்னர் பேசுவோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உரங்களையும் பதிவுசெய்யப்படாத களஞ்சியசாலைகளையும் வர்த்தக நோக்கில் மறைத்துவைத்துள்ளவர்களையும் அரசாங்கம் சோதனை செய்து கையகப்படுத்தியபோது எங்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் குரல் எழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை மூடைநெல் இருக்கின்றது,எத்தனை மூடை அரிசி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.அதனைதிட்டமிட்டு பதுக்கி அரசியல் விலையினை 120ரூபாவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பது என்பது மிகப்பெரும் அடாத்தான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.அரசியல்வாதி என்பதற்காக எல்லா பிழைகளையும் நியாயப்படுத்தமுடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை விமர்சிப்பதை விடுத்து பாமர மக்கள் அல்லது விலையெற்றத்தால் கஸ்டப்படுகின்ற மக்கள் பக்கம் இருக்க வேண்டும். அதே போன்றுதான் மண்மாபியாக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எங்களுடைய எதிர்கட்சி உறுப்பினர் அடிக்கடி பேசுகின்ற காரணத்தால் மட்டக்களப்பில் ஏதோ தங்கச்சுரங்கம் இருப்பது போல் தெற்கில் இருக்கின்ற அனைத்து மண்வர்த்தகர்களும் இந்தப் பகுதியிலே வந்து வட்டமிடுவதும் இங்கிருக்கும் மண்ணை வியாபாரம் செய்வதற்கு தூண்டுகின்ற விடயமாக இருக்கின்றது.
எழுபது எண்பது வருடங்களாக பாராளுமன்றத்திலே கூக்குரல் எழுப்பியவர்கள் இன்று எங்களுக்காக அல்லது பிள்ளையானுக்காக பாராளுமன்றத்தில் பேசுவது அதிகமாக இருப்பது தொடர்பில் எண்ணி கவலையடைகின்றேன்.
மக்களுடைய பிரச்சனைகளை பேசி மக்களுக்கான தீர்வை காணும் விடயத்திலேயே முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அல்லது அவர்கள் சொன்னது போல தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென எதிர்கட்சியினரிடம் இவ்விடத்திலே அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் அன்மையில் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பில் 50 இரத்தமாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அதிகமானோருக்கு டெல்ரா பிரல்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.