நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று(10) மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
நாட்டில் கொரோனா பரவலைகட்டுப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20 திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் நிலையில், கடுமையான சுகாதார வழிமுறைகளுக்கமைய நாட்டை மீண்டும் திறக்க முடியுமென ராகமை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெல்டா திரிபுடனான கொரோனா அலையில் சில கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் ஏற்படுமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த தரவுகள் ஆரயப்பட்டதன் பின்னரே நாட்டை திறப்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானத்தினை எட்ட முடியுமெனவும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சனத்தொகையில் 85 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 85 வீதத்தினை அடைந்ததன் பின்னர் இரண்டு வாரங்களில் இதன் விளைவுகளை அறிந்து கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு இயல்பு நிலையை அடைகின்ற போதும், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நிபுணர் குழுவின் வழிகாட்டல்களின் கீழ் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் எனவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் முதல் ஆரம்ப வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.