மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாநகரசபை இணைந்து விசேட வீதிச்சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்த நிலையில் அதில் இருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
தற்போது நாடுபூராக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம், ஊறணி, கூளாவடி பார்வீதி, கொக்குவில், கல்லடி போன்ற பிரதேசங்களில் மக்கள் சட்டத்தை மீறி தேவையின்றி வீதிகளில் நடமாடுவதாகவும், அவ்வாறே அந்த பகுதிகளில் உள்ள பல கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாகச் சுகாதாரத் துறையினர், பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று கூளாவடி மற்றும் பார்வீதி போன்ற பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சட்டத்தை மீறி கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கடைகளை மூடவைத்ததுடன், சில கடைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.