பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு ஏற்ப கொண்டு வருவதற்கு மீளாய்வு செய்ய வேண்டும் . ஐ.நா சபை பரிந்துரை

இலங்கையில் நடைமுறையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு ஏற்ப கொண்டு வருவதற்கு மீளாய்வு செய்யப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் மேரி லாளர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எழுவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ளுமாறு  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்விலும் வலியுறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலும் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் தாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து Alaina teplitz விலகும் நிலையில்,  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள் என்பது அமெரிக்கர்களுக்கு   மாத்திரமின்றி அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் அனைத்து ஜனநாயக பங்காளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் Alaina teplitz தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்தகால மற்றும் நிகழ்கால  அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து  உண்மையான மற்றும் நம்பகத்தன்மையுடனான விசாரணை நடாத்தப்பட்டு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமானது எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கம்,  நீதிப் பொறிமுறைமை மற்றும்  அமைதியினை நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும்,  பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து கவனம் செலுத்துமாறும் Alaina teplitz அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது ஈரான் அளித்த உறுதியான ஆதரவுக்கு இலங்கை அரசாங்கம் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்  Hashem Ashjazadeh மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானுடனான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா  உள்ளிட்ட துறைகளில்  ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புரவு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்துடனான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பொறுப்பு மற்றும்  ஆதரவினை ஈரான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்  Hashem Ashjazadeh தமது வாழ்த்துகளையும் இதன்போது தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை