மட்டக்களப்பில்-சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு- செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றில் அண்மைய தினங்களாக இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு வருவதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் 2015ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப்பகுதியில் மணல் அகழ்வு முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது.

மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணா விரதம் இருந்து மணல் அகழ்வை முற்று முழுதாக நிறுத்தியிருந்தனர்.

சென்ற ஜூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் சித்தாண்டி புதுவழி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சந்தனமடு ஊடாக இரண்டு கிலோமீட்டர் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது வீதி அதிகார சபையினால் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் வீதி அபிவிருத்திக்கு தேவையான மணலை குறித்த பகுதியிலுள்ள ஆற்றில் இரவு வேளையில் சுமார் 300 கீப் அளவிலான பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றிருக்கின்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்.

மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து சுத்திவர சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலான ஆற்று மணல் பரப்பில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பனம் பழ விதைகள் நடப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதற்குக் காரணமாக இருக்கின்ற மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையம் மற்றும் பொதுமக்கள் அத்துடன் குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோத மணலில் ஈடுபடுகின்ற ஒரு சில நபர்களுக்கு இணக்க சபை மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பணம் விதைகள் நடப்பட வேண்டும் எனவும் தெரிவித்த நிலையில் அனைவரும் சேர்ந்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக விதை நடப்பட்ட நிலையில் பனை மரங்கள் வளர்ந்து வருகின்றது.

சூழலையும் வெள்ளப் பெருக்கையும் குறித்த ஆற்றினுடைய நிலப்பரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறாக நடப்படுகின்றது.

குறித்த வீதியின் அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக இந்த மணல் அகழ்வு இரவோடிரவாக அப்பகுதியில் இருந்து அகழப்பட்டிருப்பதாக பொது அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளால் பல பன மரங்கள் பிடுங்கி வீசப்படும் பல மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் உட்பட சிகண்டி அறக்கட்டளை நிலைய உறுப்பினர்கள் அப்பகுதிக்கு பொறுப்பான கிராமசேவகர் உட்பட பலர் நேற்று பிற்பகல் சென்று பார்வையிட்டதுடன் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

பின்னர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

அதன்பின்னர் முறைப்பாடு செய்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட பொலிசார் மற்றும் பலரும் குறித்த இடத்தை பார்வையிட்டனர்.

வருகை தந்த பொலிஸார் குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் ஆதாரங்களை பெற்றுக் கொண்டனர்.


புதியது பழையவை