மேலும் இரண்டு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர்.
இன்று ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் (விஸ்வா ) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் மீது இராணுவத்தினர் நடந்த தாக்குதல் சம்பவத்தை அறிக்கையிட வேண்டாம் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவரே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், சம்பவத்தை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்வாளர்கள் வெவ்வேறு இலக்கங்களிலிருந்து தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதல் இணைப்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.