யாழ்ப்பாணம் மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்பிட்டியில், 7 பரப்பு காணியும், ஜே/11 பிரிவு – மண்கும்பானில், 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு – வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளும், கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று காலை அங்கு வருகை தந்தனர்.