எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மற்றும் பரீட்சைகள் சம்பந்தமாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கண்டியில் விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து மீண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
பாடசாலை கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்படும். 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மூன்றாவது வாரத்திலும் உயர் தரப்பரீட்சை பெப்ரவரி மாதம் முடிவடைய உள்ளது.
அத்துடன் சாதாரண தரப் பரீட்சைகளை மே மாதம் தொடங்கி, ஜூன் மாதம் நிறைவு செய்ய பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டு கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுற்றறிக்கைக்கு அமைய பெற்றோர்கள் விண்ணப்பங்களை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.